Wednesday, October 30, 2013

Posted by Unknown on 3:54 AM No comments



சூடான சாதத்தில், சிறிது சுக்குப்பொடி, உப்பு, நெய் அல்லது நல்லெண்ணைச் சேர்த்து பிசைந்து, ஓரிரண்டு கவளம் சாப்பிட்டால், வயிற்றுத்தொல்லை மற்றும் உடல் வலி தீரும்.

சுக்கோடு, தனியாவையும் (கொத்துமல்லி விதை) சேர்த்து பொடிக்கும் பொழுது, சுக்கின் காரம் சற்று குறைந்து, மணமும் அதிகரிக்கும். இந்தப்பொடி தயாரிக்க, ஒரு விரலளவு சுக்கையும், 2 டேபிள்ஸ்பூன் தனியாவையும், தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்தெடுத்து, பொடிக்க வேண்டும்.

அதற்குப்பதில், கடைகளில் கிடைக்கும் "சுக்கு மல்லி காபி பொடியை" உபயோகித்து இந்த சாதத்தைச் செய்தேன். சுவையில் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. சூடாக இந்த சாதத்தை சாப்பிட்டு விட்டு, ஒரு கப் ரசமோ அல்லது ரசம் சாதமோ சாப்பிட்டால், உடம்பிற்கு நல்லது.

தேவையானப்பொருட்கள்:

சூடான சாதம் - 1 கப்
சுக்கு மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - சிறிது
நெய் அல்லது நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் உப்பு, சுக்கு மல்லித்தூள், சிறிது நெய் அல்லது எண்ணை விட்டு, கலந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, மீதமுள்ள நெய் அல்லது எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, அடுப்பை அணைத்து விடவும். அதில் சாததைக் கொட்டி நன்றாகக் கிளறி விட்டு உடனே சாப்பிடவும்.

பின்குறிப்பு: இதை தாளிக்காமலும், அப்படியே சாப்பிடலாம். ஆனால் தாளித்து செய்யம் பொழுது, சுவை கூடி நன்றாக இருக்கும்.

0 comments:

Post a Comment